html

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Friday, 27 November 2015

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு,சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு,சென்னை

 ராமனால் தான் இப்புனித தலம் உருவானது. அது பற்றிய புராண வரலாற்றைப் பார்க்கலாம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட பிறகு ராமன் அயோத்தி திரும்பி மகிழ்ச்சியுடன் ஆட்சி நடந்து வந்தார். 


திடீரென ஒருநாள் அவருக்கு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஒற்றன் ஒருவனை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து, ``அரசே இரவில் பிரிந்திருந்த கணவன்-மனைவி இருவரும் சண்டை போடுவதை நான் பார்க்க நேர்ந்தது. 


அந்த கணவன், நான் ஒன்றும் ராமன் அல்ல. அவன் வேண்டுமானால் பலநாள் பிரிந்திருந்த சீதையை சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஒருநாள் இரவு நீ என்னை பிரிந்ததால் உன்னை இனி நான் என் மனைவியாக சேர்க்க மாட்டேன் என்று கூறினான் என்றான். இதை கேட்ட ராமன், சீதைக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார். 


அப்போது சீதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.


கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார். 









சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார். 

லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். 

ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. 

(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார். 

அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். 




அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். 

இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. இனி இந்த ஆலயத்தின் அமைப்பையும், இறை மூர்த்தங்களின் மகிமைகளையும் காணலாம். 

குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது. 

அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 

சமீப காலமாக இந்த பூஜையில் கலந்து கொண்டு சரபேசுவரரை வணங்குபவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. இத்தல சரபேசுவரரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த 16 கால் மண்டப தூண்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. 


நுழைவாயிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்பது போல உள்ளது. ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து 4 கால் மண்டபத்தில் நந்தி உள்ளார். ஒரு தடவை இவர் சித்தம் கலங்கி தவித்தார்.

அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது.

இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.

குறுங்காலீஸ்வரர் தலத்தில் நந்தி பெருமானை வழிபட்டு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற பலனை பெறத் தவறாதீர்கள். நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம்.

இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன.

அவர்களை தரிசித்து விட்டு ஈஸ்வரன் வீற்றிருக்கும் சன்னதிக்கு செல்லலாம். ஈஸ்வரன் சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும்.

லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம்.

விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம்.

பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது.

இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். மனக் குழப்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார்.

கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை, தலமரமான பலா ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.

கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசிமகம், சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஈசன் இங்கு வடக்கு திசை பார்த்திருப்பதால் இத்தலம் மோட்சம் தரும் தலமாக கருதப்படுகிறது. இது தவிர சித்தர்கள், சப்தரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இங்கு சூட்சம நிலையில் அருள் பாலிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்வது நல்லது. ஆலயத்தை 044-24796237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 








காசிக்கு இணையான தலம் :


இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இதை அறிந்து தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குறுங்காலீஸ்வரரை வழிபட்டு பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். 

இத்தலத்தில் குறுங்காலீஸ்வரர் காசி இருக்கும் வட திசையை பார்த்தப்படி உள்ளார். அதனால் இத்தலம் காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படுகிறது.


Thursday, 26 November 2015

காரணீஸ்வரர் கோவில்,சைதாபேட்டை,சென்னை






காரணீஸ்வர் கோவில்  தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது.
இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.
இதனை அறிந்த தேவேந்திரன் இந்த பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.











இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.
அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.
வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.














Saturday, 7 November 2015

கபாலீஸ்வரர் கோவில் மயிலாப்பூர்,சென்னை




தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

















இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.













மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :

பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.

இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.



இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.

அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.

ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.



















மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.

1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
"துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.

11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.

துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.

சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.

மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் கூறுகிறார்.










ஸ்தல வரலாறு:

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.

அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.















இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. இதன் உயரம் சுமார் 120 அடி உயரமும் உடையது. வெளிப் பிரகாரம் விசாலமாமாகவும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம்.

சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன. கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.

கபாலீசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் உள்ள கோயிலில் மேற்கு திசை மேவி ஆறுமுகத்தோடு அமர்ந்திருக்கிறான் சிங்கார வேலவன். கற்பகவல்லிக்கு நேர் தெற்கே வாயிலார் நாயனார் கோயில் அமைந்துள்ளது. முக்கிய வாயிலின் வடப்புறம் திருஞானசம்பந்தர் பூம்பாவையுடன் இருக்கிறார். கோயிலின் வடக்குவெளிச் சுற்றிலே புனித புன்னை மரம் இருக்கிறது.

ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் குறைநீக்கி அருளுகின்றார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது.

நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன. நந்தியம் பெருமானுக்கு விசேஷ நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது.











Thursday, 5 November 2015

ஞாயிறு கோவில்,பஞ்செட்டி,சென்னை







பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் சென்னை - கல்கத்தா நெடும் சாலையில் வழியில் உள்ளது. காரனோடை மற்றும் பெரியபாளையம் ஜங்ஷன் தாண்டி நேராக செல்ல வேண்டும். தொடர்ந்து கல்கத்தா தேசிய நெடும் சாலையில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும். உல் சாலையில் ஒரு முந்நூறு அடி சென்று இடது பக்கம் திரும்பினால் கோவில் உள்ளது. 















திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பஞ்சேஷ்டியில் (பஞ்செட்டி) அமைந்துள்ளது  ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில்.  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. விஷேச நாட்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய சிவ ஸ்தல மாக உள்ளது. கோவிலின் தல வரலாற்றில், கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் அகத்தியர் தீர்த்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தல வரலாற்றின்படி ஒரு முறை சுகேது என்ற அரக்கன் மகிஷாரண்யம் என்ற வனத்தில் இருந்த மகா ராட்சதர்களான மத்தன், உன்மத்தன், பிரமத்தன் என்பவர்களோடு சண்டையிட்டு சோர்ந்து போய் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதையறிந்த சுகேதுவின் மூன்று மகன்களும் ஒன்று சேர்ந்து அந்த மூன்று மகா ராட்சதர்களையும் கொன்று போட்டு, பின்னர் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால் உலகில் பிரளயம் ஏற்பட்டு அனேக உயிர்களும் அவதிப்பட்டதை கண்ட அகத்திய முனிவர், சமுத்திரத்தை பானகம் போல் அருந்திவிட்டார்.சமுத்திரம் வரண்டதால் வேதனையடைந்த வருடன், குபேரன் ஆகியோர் அகத்திய முனிவரிடம் பணிந்து வேண்டியதால் சமுத்திரத்தை முதலில் கொஞ்சம் உமிழ்ந்து பஞ்சேஷ்டி தலத்தில் ஒரு புண்ணிய தடாகத்தை அகத்தியர் ஏற்படுத்தினார். பின், தன்னுள் மீதமிருந்த சமுத்திரத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றார். அகத்திய முனிவரின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சுகேதுவும் அவனது மகன்களும் தங்களின் பாவ விமோசனத்திற்காக அகத்திய முனிவரை மனம் உருகி வேண்டினர். மனம் இறங்கிய அகத்தியரும் அவர்களை, தான் உருக்கிய புண்ணிய தடாகத்தில் (அகத்திய தீர்த்த குளம்) மூழ்க செய்து சிவாலயத்தில்  ஐந்து யாகங்கள் (தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம்) வளர்க்க ஏற்பாடு செய்தார்.பஞ்சேஷ்டி (பஞ்ச-ஐந்து, இஷ்டி-யாகம்) திருத்தலத்தில் ஐந்து யாகங்களை வளர்த்து அந்த யாக விபூதியை சுகேது மற்றும் அவனது மகன்களுக்கு பூசி அவர்களுக்கு பரமபதம் அருளினார் அகத்தியர்.அகத்திய முனிவர் கூறியபடி சுகேது அரக்கனும் அவனது குடும்பத்தினரும் அகத்திய தீர்த்த குளத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு யாகம் வளர்த்து சாபவிமோசனம் பெற்றதால், அங்கு வரும் பக்தர்களும் அந்த குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டால் சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.













மேலும் அகத்திய முனிவர் வைத்திய துறையிலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அந்த குளத் தீர்த்தத்தில் மூழ்கி கோவிலை வலம் வந்து அங்கப்பிரதட்சணம், அடி பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபாடு செய்தால் வியாதிகள் குணம் அடைவதாக ஐதீகம். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அகத்திய தீர்த்த குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால், தற்போது குளத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதர் மண்டி காட்சியளிக்கிறது. குளத்தின் படிகளில் புற்கள் முளைத்து படிகற்கள் விரிசல் விடும் நிலையில் உள்ளன. கடந்த 1995ம் ஆண்டு அந்த குளத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடந்தது. அதன்பின் குளத்தை சீர் செய்யாததால் தெப்ப உற்சவம் நடத்தப்படாமல் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அகத்திய தீர்த்த குளத்தை சீர்செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.





















திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டியில் அனந்தவல்லி அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1500 ஆண்டு பழமைவாய்ந்த இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அகத்தியர் பாடல்பெற்ற தலமாகும். இங்கு நடைபெறும் பிரதோஷம் மற்றும் பல்வேறு விசேஷ நாட்களுக்கும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். 















கோயில் அருகே சுமார் 2 ஏக்கரில் தெப்பக்குளம் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. இதன்பிறகு இங்கு எந்த விழாவும் நடத்தவில்லை. தற்போது குளத்தில் தண்ணீர் கிடையாது. இதனால் குப்பை, கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்திவிட்டனர். கோயில் கோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விரிசல் ஏற்பட்டு  இடியும் ஆபத்து உள்ளது.உடனடியாக கோயிலையும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.